Flash News

Friends Tamil Chat

Search This Blog

Monday 22 December 2014

மூச்சு என்ன செய்யும்? - What is Breathing?







மூச்சு என்ன செய்யும்?
********************************
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.
சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.
சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.
ஒன்று
நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.
இரண்டு
இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது .
அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.
இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.
இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.

செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.
அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும்.
வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.
சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.
எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.
காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.
அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.
என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.
அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?
நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம் , தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.
மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது.
இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.
எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.
ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.
ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை.
கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.
எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.
அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.


மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.
நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.
ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.

பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.
உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.
"மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.



--

Tuesday 5 August 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி, சுய தொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு இல்லாதோர் நிவாரண உதவித் தொகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஃபிட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது 2 ஆண்டுப் பயிற்சியாகும். பயிற்சி வகுப்பில் சேர்பவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.300 வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர அடிப்படை கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் ஃபிட்டர் பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறதா?
மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடனில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
என்ன சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப் படுகிறது?
பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும்போது பொருட்களின் விலைப்பட்டியலை இணைத்து வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான நிவாரண உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறதா?
ஆம். மாதாந்திர உதவித் தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375, பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ளவர்களுக்கு ரூ.450 வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து ஓராண்டாகி இருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகையைப் பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி 
நண்பன் தமிழ்

கொட்டும் நண்பர்கள் தின வாழ்த்துகளும், தன்னந்தனியாக வாடும் உயிர்த் தோழனும்



ஒரு காலத்தில் 'நண்பர்கள் தினம்' என்பது நமக்கு எப்போதும் தோள் கொடுத்து உதவும் நண்பர்களுடன் காலையில், தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டு, பின் அதே நண்பர்கள் கூட்டத்துடன் சினிமா, கடற்கரை என்று சுற்றிவிட்டு, இரவு தூங்க செல்லும்முன் கூட நாம் முதன்முதலாக எங்கு சந்தித்தோம், எப்படி நண்பர்களானோம் என்று சற்றும் சலிக்காமல் அரைத்த மாவையே அரைத்து அப்படியே உறங்கி போகும் அழகான நாட்களையும், ஆழமான நட்பையும் நாம் எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்தில் கொண்டாடியிருக்கிறோம்.
ஆனால், இன்றோ நண்பர்கள் தினம் என்பது ஃபேஸ்புக்கில் நெருங்கிய நண்பர்கள், தூரத்து நண்பர்கள், மிகவும் தூரமாக இருக்கும் நண்பர்கள் என்று மொத்தமாக ஒரு எல்லாருக்குமாய் சேர்த்து ஒரு குரூப் மெசேஜ், வாட்ஸ்ஆப்பில் பலவிதமாக ஸ்டிக்கர்களுடன் ஒரு வாழ்த்து. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு மொத்தமாக தட்டிவிடப்படும் மெயில் என்று இதுவும் ஒருவிதமாக கடமையாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்கள் மூலம், உலகம் சுருங்கிவிட்டதாலோ என்னவோ நம் உலகிலுள்ள உள்ள உற்ற நண்பர்களை நம்மால் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இன்று ஒரு பைசா செலவில்லாமல், இணையத்தின் மூலம் பலரைத் தொடர்பு கொள்ள முடிவதால், நாம் அனைவரும் இத்தகைய வசதிகளை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இது ஆழமற்ற ஒன்றாகவே இருக்கிறது", என்று யதார்த்த நிலையைத் தெரிவிக்கின்றனர்.
"இப்போ ஃப்ரெண்ட்ஷிப் பாண்ட் கட்டும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து எடுக்கும் ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம். மேலும், தற்போது 'வர்ச்சுவல்' நண்பர்களுடனான நட்பு தான் அதிகம்," என்று கூறுகிறார் நிதி ஷர்மா என்பவர்.
எனினும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், வர்ச்சுவல் நட்பு வட்டங்களாலும், நம் நிஜ வாழ்விலுள்ள நட்பு வட்டத்தை கவனிக்காமல் தவறவிடுகிறோம்.
இந்த புதுவிதமான நட்பு நடைமுறையை 'வெறும் மேலோட்டம்' என்று குறிக்கும் மனோதத்துவ நிபுணர் ராஜீவ் மேத்தா, "சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர் கண்மூடித்தனமாக பலரையும் தங்களது நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டு, அதில் அவர்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், மக்களுக்கு போதிய நேரம் கிடைக்காததும் அவர்களை வர்ச்சுவல் நட்பு பாராட்டலுக்கு வழிவகுத்திருக்கிறது.
இதனால் நெருங்கிய நட்பு வட்டம் என்பது தற்போது காணாமல் போய்விட்டது. முன்பு, நாம் நம்முடைய நண்பர்களுக்கும், நட்பிற்கும் முக்கியத்துவம் அளித்தோம். நம் வாழ்வில் எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கவேண்டும் என்றாலும், அவர்களைக் கேட்டுதான் எடுப்போம். ஆனால், தற்போது நட்பு என்பது மிகவும் மேலோட்டமாகிவிட்டது", என்று தெரிவிக்கிறார்.
தொழில்நுட்பம் என்பது நம் ஒருவரை சுலபமாக தொடர்புக்கொள்ளவும், அவர்களை தொடர்ந்து நமது நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? அதனால், இந்த நண்பர்கள் தினத்திலாவது, உங்களுடைய வர்ச்சுவல் நண்பர்களுக்கு ஒரு பொதுவான வாழ்த்தை சொல்லிவிட்டு, உங்கள் பள்ளி நண்பனுடனோ, கல்லூரி தோழனுடனோ சிறிது நேரம் செலவழிக்கலாம்தானே!
சொல்ல மறந்துவிட்டேன்! இந்த கட்டுரைப் பொறுமையாக படித்த என் 'ஆன்லைன்' நண்பர்கள் அனைவருக்கும், என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

Saturday 14 June 2014

இப்படிக்கு இவர்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து என்பது பெருந்திரளின் பாலே நடனம்
- டிமிட்ரி ஷோஸ்டாகோவிச் (1906- 1975), ரஷ்ய இசைக் கலைஞர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரேசிலைப் பொறுத்தவரை உணவு, உறக்கம், பானம் எல்லாமே கால்பந்துதான். பிரேசிலின் உயிரே கால்பந்துதான்.
- பீலே, பிரேசில் அணியின் முன்னாள் வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வா சாவா என்பது போன்ற ஒரு விஷயம்தான் கால்பந்து என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. கால்பந்து அதையும்விடத் தீவிரம் வாய்ந்த ஒன்று என்பதை அவர்களுக்கு நிரூபிக்க என்னால் முடியும்.
- பில் ஷாங்க்லி (1913-1981), ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து விளையாட்டில் எல்லாமே மிகவும் சிக்கலாகிவிடுகிறது எதிரணியின் இருப்பால்.
- ழீன்–பால் சார்த்தர் (1905-1980), தத்துவவாதி, நாவலாசிரியர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்தின் அடிப்படையே உற்சாகம்தான். அந்த விளையாட்டை மேலும் அழகாக்கும் எந்த யோசனையும் எனக்குப் பிடிக்கும்.
- ரொனால்டினோ, பிரேசில் அணியின் முன்னாள் வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெருவில் விளையாடும் குழந்தையைப் போலவே கால்பந்து விளையாடும்போது நான் உற்சாகமாக உணர்கிறேன். அப்படிப்பட்ட உற்சாகத்தைக் கால்பந்தில் நான் உணராத நாளில் அந்த விளையாட்டிலிருந்தே நான் வெளியேறிவிடுவேன்.
கடிகாரம் செய்வதைப் போலத்தான் கால்பந்து விளையாடுவதும், உறுதியும் துல்லியமும் இல்லையென்றால் திறமையும் நளினமும் வீணே.
- லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா வீரர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒழுக்கம், கடமை போன்றவற்றையெல்லாம் நான் கற்றுக்கொண்டதற்கு கால்பந்துக்குத்தான் நன்றிசொல்ல வேண்டும்.
ஆல்பெர் காம்யூ (1913-1960), எழுத்தாளர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்தைப் பொறுத்தவரை கடந்த ஆட்டத்தை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுவார்கள். நாம் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவும் பிரமாதமானவராக இருந்தாலும் சரி, கடந்த ஆட்டம் மட்டும்தான் எல்லோருடைய நினைவிலும் இருக்கும்.
- தியரி ஆன்ரி, பிரான்ஸ் கால்பந்து வீரர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால்பந்து விளையாடுவதாலேயே நற்பண்பு வந்துவிடாது. ஆனால், உங்கள் மோசமான குணங்களை அது அகற்றிவிடும்.
- டேரல் கே. ராயல், முன்னாள் அமெரிக்கக் கால்பந்து வீரர் (1924-2012)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எத்திசையும்



உறுதியாக நின்ற உருகுவே
தென் அமெரிக்க நாடான உருகுவேதான் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் முதல் சாம்பியன். முதல் உலகக்கோப்பைப் போட்டி நடந்ததும் உருகுவேயில்தான். ஆனால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஐரோப்பிய நாடுகள் தயக்கம்காட்டின. 'அத்தனை தூரம் பயணம் செய்து யாரப்பா விளையாடுவார்கள்?' என்று அலுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், கடைசியில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லோவியா ஆகிய நான்கு நாடுகளின் அணிகளை மட்டும் அனுப்பின. இதனால் சங்கடமடைந்த உருகுவே, அடுத்து நடந்த இரண்டு உலகக்கோப்பைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. "எங்கூருக்கு வர மாட்டீங்க... ஒங்கூருக்கு மட்டும் நாங்க வரணுமோ?" என்று வீராப்பு காட்டிய உருகுவே, 1950-ல் பிரேசிலில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை மீண்டும் வென்றது. ரோஷமுள்ள சாம்பியன்தான்!

'அது கடவுளின் கை!'
கால்பந்து என்றால் பீலேவுக்குப் பின்னர் கடவுளாகப் போற்றப்படுபவர் அர்ஜெண்டினாவின் மரடோனா. மறக்க முடியாத எத்தனையோ கோல்களை அடித்துப் புகழின் உச்சிக்குச் சென்ற அந்த மேதையின் ஒரு கோல் மட்டும் சர்ச்சைக்குரியது. 1986-ல் மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக நடந்த போட்டியில் பிரிட்டன் வீரரை ஏமாற்றி பந்தைத் தலையால் தட்டி கோல் விழச் செய்தார் மரடோனா. உடனே, ஓடிச் சென்று அணியின் மற்ற வீரர்களை ஆரத்தழுவிக் கொண்டாடவும் செய்தார். ஆனால், அந்த கோலை, தலையால் மட்டும் அல்ல, கையாலும் தட்டினார் என்று பிரிட்டன் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அதை நம்பவில்லை. பலகாலம் கழித்து அந்த உண்மையை மரடோனா தனக்கே உரிய பாணியில் ஒப்புக்கொண்டார். "அந்த கோலை என் தலையும் 'கடவுளின் கையும்' இணைந்தே அடித்தன" என்று கூறிவிட்டார். ஆண்டவனிடம் அப்பீல் ஏது?

16 ஆண்டுகால சாம்பியன்!
இத்தாலிதான், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் நீண்டகால சாம்பியன். அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.1934-ல் போட்டியை நடத்திய இத்தாலியே கோப்பையை வென்றது. தொடர்ந்து 1938-ல் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய உலகக்கோப்பைப் போட்டி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நடைபெறவில்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். இந்த எட்டு ஆண்டு இடைவெளியையும் சேர்த்துத்தான் இத்தாலியின் 16 ஆண்டுகால சாம்பியன் சாதனை என்பது வரலாற்றில் மிக முக்கியம் அமைச்சரே!

சொந்த ஊரில் நொந்துபோன தென் ஆப்பிரிக்கா
2010-ல் உலகக்கோப்பை நடந்தது தென் ஆப்பிரிக்காவில். முதன்முதலாக, ஆப்பிரிக்க மண்ணில் நடந்த உலகக்கோப்பைப் போட்டி அதுதான். போட்டியை நடத்தும் நாடு என்பதால், முதல் சுற்றில் விளையாட அந்நாடு தகுதிபெற்றிருந்தது. ஆனால், அத்தனை பலமில்லாத அந்த அணி, உருகுவே அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று, முதல் சுற்றிலேயே வெளியேறியது. போட்டியை நடத்தும் நாடு முதல்சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது அந்தப் போட்டியில்தான்!

ஆசியாவின் நிறைவேறாத ஆசை
ஆசியாவில் ஓரளவு பலம் கொண்ட அணிகள் என்றால், தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறிப்பிடலாம். எனினும், தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த உலகக்கோப்பையில் எந்த ஆசிய நாடும் வென்றதில்லை. 2002-ல் இந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து உலகக்கோப்பைப் போட்டியை நடத்தின. இரண்டாவது சுற்றில் துருக்கியிடம் தோல்வியடைந்து ஜப்பான் வெளியேறியது. தென் கொரியா மட்டும் போராடி அரையிறுதி வரை சென்றது. ஆனால், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்தது.

நாட்டாமை… கார்டை மாத்திக் காட்டு
கால்பந்து போட்டிகளில் வீரர்களின் ஓட்டத்துக்குச் சமமாகப் போராடுபவர்கள் நடுவர்கள்தான். சும்மா சொல்லக் கூடாது, காளையின் பலத்துடன் களத்தில் நிற்கும் வீரர்களின் கோபதாபங்களுக்கு ஈடுகொடுக்கும் மன உறுதி பெற்றவர்கள் அவர்கள். இந்த முறை, 14 நாடுகளிலிருந்து 25 நடுவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஓசியானியா பகுதியிலிருந்து பங்கேற்கும் ஒரே நடுவர், நியூசிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓலேரிதான். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 25 நடுவர்களில் மூன்று பேர்தான் தொழில்முறை நடுவர்கள். மற்ற அனைவரும் பிற துறைகளில் பணியாற்றுபவர்கள். இந்தப் பட்டியலில் ஒரு வழக்கறிஞரும் இருக்கிறார். அப்ப சரி, நாட்டாமை பணி நல்லவிதமா நடக்கும்!

எடுபடுமா அமெரிக்கா?
உலகத்துக்கே நாட்டாமையாக இருக்கலாம். ஆனால், உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கென்று பெரிய சாதனைகள் கிடையாது. 2002 உலகக்கோப்பைப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய அமெரிக்கா ஜெர்மனியிடம் தோற்றது. அதுவே அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதனைதான். சூறாவளியாய் இயங்கும் சுண்டைக்காய் நாடுகளிடம் வல்லரசின் வலிமை எடுபடுமா என்பது சந்தேகம்தான்!


இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது?




இந்திய வீடுகளும் சரி; அரசியலும் சரி... விளையாட்டைப் புறக்கணிக்கவே செய்கின்றன
வேடிக்கையாக இல்லை இது! உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்தியக் கால்பந்தாட்டத்தின் வயது
உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.

இந்தியக் கால்பந்தின் பொற்காலம்
1951 முதல் 1962 வரையிலான காலத்தை இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சையது அப்துல் ரஹீமின் கால்வண்ணத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த அணியாகத் திகழ்ந்தது இந்தியா. 1951-ல் நடந்த ஆசியப் போட்டிகளில் இந்திய அணி சாம்பியன். தொடர்ந்து, கொழும்புப் போட்டிகளிலும் வெற்றி. 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு. தொடர்ந்து 1953 பர்மா, 1954 கொல்கத்தா, 1955 டாக்கா போட்டிகளில் வெற்றி. 1954-ல் மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டாவது இடம். 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடம். இடையில், 1958-ல் ஆசியப் போட்டியில் நான்காவது இடம், 1960 ஆசியக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வி என்று பின்னடைவுகளைச் சந்தித்தாலும், 1962 ஆசியப் போட்டியில் மீண்டும் வெற்றி. அதன் பின்னரோ, அப்துல் ரஹீமின் மறைவு இந்தியக் கால்பந்தாட்டத்தைச் சுருட்டியது.

விலகி நிற்பதின் துயரம்
கால்பந்தாட்டம் என்றில்லை, பெரும்பாலான விளையாட்டுகளில் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து புதைவையே சந்தித்திருக்கிறோம். ஹாக்கியில் நம் நிலை என்ன?
ஒருகாலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி தயான் சந்த். 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட ஹிட்லர் தன் நாட்டுக்கே வருமாறு அழைத்தார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்களை ஹாக்கியில் வென்றோம். 1980-க்குப் பின் என்னவானது?
இந்தியாவின் இன்றைய விளையாட்டுச் சாதனை யாளர்களாக அறியப்படும் பலர் அடிப்படையில் தங்கள் சொந்த பலத்தில் (பண பலத்தையும் சேர்த்துதான்) முன்னே வந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்த், கீத் சேத்தி, லியாண்டர் பயஸ், அபிநவ் பிந்த்ரா எல்லோர் கதையும் இதுதான்.
விளையாட்டு என்பது ஒரு தனிக் கலை. நம்முடைய வீடுகளும் பெற்றோரும் அதை ஒரு பகுதிநேரப் பொழுதுபோக்காகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பள்ளிக்கூடங்களும் விளையாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கியே வைக்கின்றன. அரசியல்வாதிகளோ வெட்கமே இல்லாமல், அங்கும் பணம் பண்ணத் திரிகிறார்கள். ஊடகங்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் கண்ணில் தெரிவதில்லை.
சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடும் செய்திகள் வெளியான 1990-ல் இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம்போல விளையாட்டு ஆர்வம் வந்தது. அந்தோ பரிதாபம்... அந்த ஆர்வமும் போட்டிக்குப் போட்டிகளை நடத்தும் ஆர்வமாக மாற வேண்டுமா? காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போட்டியிட்டோம். 1991-ல் சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கோதாவில் இறங்கியதும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்த வேண்டும் என்பது நமக்கு வெறியாக மாறியது. 2003-ல் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அப்புறம் சாவதானமாக 2007-ல் நிதி ஒதுக்கீடு செய்தபோது, போட்டியை நடத்துவதற்கான திட்டச்செலவு ரூ. 1,200 கோடி ரூ. 40,000 கோடியாக மாறியது.
அப்புறம் நடந்த கதைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். "ரூ. 960 கோடியில் புனரமைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கக் கட்டுமானப் பணி பல் இளிக்கிறது", "குர்காவ்னிலுள்ள கடார்பூர் விளையாட்டரங்க மேற்கூரை மழையில் இடிந்து விழுந்தது" என்று தினம்தினம் படித்த செய்திகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றனதானே?

பெய்ஜிங் அதிசயம்
பெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது உண்மையிலேயே அதிசயம். 1936-க்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்றால், அது 2008-ல்தான். கற்பனைசெய்து பாருங்கள்: 100 பதக்கங்கள்; அவற்றில் 51 தங்கம். எவ்வளவு மகத்தான சாதனை!
ஆனால், இந்தச் சாதனை சாதாரணமாக வந்ததல்ல; நீண்ட காலத் திட்டமிடுதலும் அசாத்தியமான உழைப்பும் சீனர்களின் இந்த வெற்றிக்குப் பின் இருந்தது. சீனா முழுவதும் 6.5 லட்சம் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. முழுத் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் 25 ஆயிரம் பேர் அங்கு பணியில் இறக்கிவிடப்பட்டனர். தன்னுடைய ஆர்வத்துக்கேற்ற விளையாட்டை தொழில்முறையாகக் கற்பதற்கான வாய்ப்பை சீனக் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலேயே அந்நாட்டு அரசு கொடுக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக அந்நாடு தீட்டிய திட்டத்தின், உழைப்பின் வெளிப்பாடுகள்.
நம்முடைய அரசும் திட்டமிடுகிறது; பதக்கங்களைக் குவிக்க. எப்படி என்று பாருங்கள். 2009-ல் விளையாட்டுக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,706 கோடி. 2010-ல் இது ரூ. 3,565 கோடியாகக் குறைந்தது. 2013-லோ ரூ. 1,219 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற அரசு சாராத அமைப்பின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 2,500 கோடி என்கிற தொகையுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்… நம்முடைய அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்கள்!
இந்தியாவின் மோசமான கிராமங்களில் ஒன்றிலிருந்து, மிக சாதாரணமான குடும்பம் ஒன்றிலிருந்து சர்வதேசத் தடகள வீராங்கனையாக உருவெடுத்த சாந்தியின் கதை பின்னாளில் என்னவானது என்று யாருக்கேனும் தெரியுமா? ஒருநாள் அவர் செங்கல் சூளையில் வேலைசெய்துகொண்டிருந்த படம் பத்திரிகைகளில் வெளியானதும் அரசாங்கம் போனால் போகிறது என்று அவருக்குத் தடகளப் பயிற்சியாளர் வேலை கொடுத்தது. பிறகு, ஒருநாள் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், சொற்ப சம்பளம் ஐந்தாயிரம் போதவில்லை என்று கூறினார். பின் ஒருநாள் பல முறை முறையிட்டும் யாரும் அவர் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிலையில் அந்தத் தாற்காலிக வேலைலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நண்பர்களிடம் விசாரித்தேன். பயிற்சியாளர் பணிக்கு விளையாட்டு மட்டும் தெரிந்தால் போதாது; படிப்பும் வேண்டும் என்பதால் இப்போது பிழைப்புக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த நாடு ஏன் வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது என்று புரிகிறதா?

Saturday 31 May 2014

பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா?




பேய் இருக்கா, இல்லையா?…நம்பலாமா? நம்பப்படாதா? 
என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதறவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேசமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவி களைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம்.
தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் 'ரொமான்டிக் லுக்' விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப் படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே, ஒரு நூறை நெருங்கும். 'யார்', 'மை டியர் லிஸா', 'ஜென்மநட்சத்திரம்', '13-ம் நம்பர் வீடு' 'வா அருகில் வா' போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், 'யாவரும் நலம்', 'பீட்சா' போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக 'யாமிருக்க பயமே' என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே நம்பியிருக்க மாட்டார்!
என்றாலும், அறிவியல்பூர்வமாக எந்த அடிப்படையும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிய கதைகள், திரைப்படங்கள் மக்களைக் கவர்வது ஏன்? பேயின் இருப்புபற்றிய சந்தேகம் இருந்தாலும் மனதில் கிலியுடன், பாதுகாப்பான வளையத்துக்குள் அமர்ந்து பேய்ப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களால் அந்த பய உணர்வை ரசிக்க முடிகிறது என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தான் எழுதிய 'காஞ்சனை' கதைகுறித்த கேள்விக்கு "பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறதே!" என்று புதுமைப்பித்தன் பதிலளித்திருக்கிறார். "நம் நினைவுகள்தான் பேய்கள்" என்று மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கதைகளை அடிப்படையாக வைத்துப் பல 'திகில்' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆதி மனிதர்களாகக் குகைகளில் நாம் வாழ்ந்துவந்த காலகட்டத்தில்தான் நம்மிடையே பேய் பற்றிய பயம் வந்தது. ஒருவேளை, பேய் நம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை தோன்றுவதற்கும் காரணமோ? விவசாயம், அறிவியல், கல்வி போன்ற விஷயங்கள் அறிமுகமாகாத அந்தக் காலகட்டத்தில், புதிரான சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஏதேனும் ஒரு 'சக்தி'தான் காரணம் என்று குகை மனிதர்கள் அஞ்சினர். உதாரணமாக, குகைக்கு வெளியே கற்கள் உருண்டோடினால்கூட, கண்ணுக்குப் புலப்படாத சக்திதான் அதற்குக் காரணம் என்று குகை மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்த பயம் நம் மனதின் எங்கோ ஓர் மூலையில் படிந்துவந்திருக்கிறது. அது இன்றும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.
கல்வியும் அனுபவமும் இந்த நம்பிக்கைகள் மீதான கேள்வியை நம்முள் எழுப்பியுள்ளதால், இந்த விஷயங்களைக் கதைகளில் மட்டும் ரசிக்கும் அளவுக்கு நம் மனம் பக்குவப்பட்டிருக்கிறது.
காட்டில் அமர்ந்து தவம் புரிந்த இரவுகளில், உடனடியாக விளக்க முடியாத ஒலிகள், அசைவுகளால் அச்சமுற்றதாக புத்தரே குறிப்பிடுகிறார். அறிவுபூர்வமாக அவற்றை அணுகிய புத்தர், தன் பயத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உணர்ந்தார்.
எனினும், கலைகளில் அறிவையும் தாண்டி கற்பனைகளே அதிகப் பங்கை வகிக்கின்றன. எனவே, பேய், டிராகுலா, ஓநாய் மனிதன் உள்ளிட்ட நிரூபணமாகாத விஷயங்கள்குறித்த கலைப்படைப்புகள் இன்றும் வெற்றிபெறுகின்றன. 'யாமிருக்க பயமே' அவற்றில் ஒன்று.
--
Thanks And Regards


ஒரு நிமிடக் கதை - சிரிப்பொலி



ரஹீம் கஸாலி - சிரிப்பொலி


நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் 'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்' என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
"என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல"
"மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்"
"அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?"
"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே"
"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல...."
"இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்."
"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்."
"அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்" என்றான் அவன் மகன்.
"எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."
போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.
http://my.cbox.ws/FriendsTamil
http://NanbanTamil.blogspot.com
http://fb.com/FriendsTamilNanban

கோச்சடையானும் ஏளனப் பார்வையும்



கோச்சடையான் வெளியான முதல் நாள். | படம்: வி.கணேசன்

ரஜினி படம் பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. முதற் காரணம்...
ரஜினி.
"ஒரு பொம்மை படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்குச் செல்ல வேண்டாம். ட்ரைலர் பார்க்கையில்- கார்ட்டூன் நெட்வொர்க்கில் போடப்பட்ட பாண்டவாஸ் படம்கூட இதைவிட நன்றாக அமைந்திருந்ததே!"
"ஒரு குறும்படம் கூட இயக்காமல் முதல் படத்துலையே ரியல் டைம் மோஷன் கேப்சர் அணுகுமுறையை யாராவது கையாளுவார்களா?"
"இப்படிப்பட்ட விஷப் பரீச்சைக்கு சூப்பர் ஸ்டார் இரையாகப் போகிறார்... இதை வேறு தியேட்டரில் பார்த்துத்தான் உணர வேண்டுமா?"
"ஹாலிவுட்டில் அவதார், 3௦௦ போன்ற படங்கள் பார்த்திருக்கிறோமே... இதைத் தாண்டியுமா கோச்சடையான் ஈர்க்கப் போகிறது?"
இப்படிப் பல கேள்விகள் கோச்சடையான் பார்க்க வேண்டாம் என்று மனதில் அஸ்திவாரம் போட்டது.
கடைசியில் படம் வெளியாகிவிட்டது. முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் என்று தோன்றுகையில் கேள்விகளால் மனதில் தொடுத்து அமைக்கப்பட்ட வேலி, ரஜினி என்ற காந்தச் சக்தியால் சுக்கு நூறாக உடைந்து திரையரங்கின் வாசலுக்கு இழுத்துச் சென்றது.
திரையரங்கிற்கு நேரடியாக சென்று கடைசி நிமிடத்தில் எப்படியாவது அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி பார்க்க நேர்ந்தது.
இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்?
நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு 'உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்' என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது.
நண்பன் ஆதியின் படையில் தளபதியாக கைகோக்கிறார் ரஜினி. அப்போ இது மீண்டும் ஒரு தளபதியா என்று யோசித்தால் அந்த எண்ணத்திற்கு அப்படியே ஒரு முட்டுக்கட்டை போட்டு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை டேக் டைவர்ஷன் எடுக்கிறது.
கோச்சடையான் வரலாறு சார்ந்த படம்தான். ஆமாம். நம் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பார்த்து வரும் அதே ரத்தம், அதே பழி, அதே வேட்டை. குடியிருந்த கோயில் தொடங்கி சிலம்பாட்டம் வரை பார்த்து பழக்கப்பட்ட அதே பழிவாங்கும் படம் தான் கோச்சடையானும். இருப்பினும், அப்படங்களுடன் இக்கதையை சரித்திரத்துடன் இணைத்ததிலும் அதற்கு ரஜினியை புகுத்தியதிலும், ஆனிமேஷனில் டெலிவர் செய்த விதத்திலும் தான் கோச்சடையான் வேறுபடுகிறது.
முதல் காட்சியில் ரஜினி அறிமுகம் செய்யப்படும்போது எத்தனை உத்வேகம் இருக்கிறதோ அதே உத்வேகம் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. மீண்டும் கூறினால் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை. முற்றிலுமாக ரஜினியின் திரை ஆளுமையை அறிந்து கொண்டு, ரசிகர்களையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வண்ணம் திரைக்கதை அமைத்ததில் சபாஷ் போடா வைக்கிறார் இவர்.
குதிரைப் படைகளில் புகுத்தப்பட்ட சக்கரம் போலத்தான் ரஹ்மானின் இசை இப்படத் திரைக்கதைக்கு. குதிரை எப்படி வளைகிறதோ அதற்கு ஏற்றார் போல் அத்தனை வளைவுகள் பயணத்திற்க்கேற்றார் போல் புதிய புதிய பாதைகள் அமைத்தது சுவாரசியத்தில் அமர வைக்கிறது. படத்தில் குறிப்பிடப்படாத மற்றொரு கதையாசிரியர், வசனகர்த்தா வைரமுத்து. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் பாடல்கள் படத்தின் ஜீவனாக இப்படத்தில் தோன்றியது.
நாசர்: ரானா இனி உனக்கு வாய்ப்புகள் அமையாது
ரஜினி: என் அன்பு மன்னா, வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாசர்: பகல் கனவு காணாதே
ரஜினி: இனி உறங்கினால் தானே கனவு கண்டிட?
இப்படி இரண்டாம் பாதியில் எதுகை மோனை குன்றாது ரஜினி பேசும் வசனங்கள் மயிர் கூச்சல் பெற வைக்கிறது.
ரஜினியின் நேசியாக 'கோச்சடையான்' திருப்தி தந்திருக்கிறது என்றால் தீபிகா படுகோனை விழுந்து விழுந்து ரசித்த கலாரசிகனுக்கு கோச்சடையான் கொஞ்சம் இல்லை... பலத்த ஏமாற்றத்தை தான் தருகிறது. ஜாக்கி ஷராஃப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் இவர்களை நன்கு சித்தரித்தவர்கள், நாகேஷை மீட்டுக் கொணர்ந்து வந்தவர்கள் தீபிகா படுகோனையும் நன்கு காட்டியிருக்கலாம். பக்ஷே அது மட்டும் பெரிய ஏமாற்றம் சாரே.
கதாப்பாத்திரங்களின் உடையலங்காரம், வாளின் ஓசையேது மூங்கிலின் ஓசையேது என்று ஒவ்வொரு பொருளுக்குரிய சப்தத்தை துள்ளியமாக பதிவு செய்த ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பு, நிழற்படங்களின் வண்ணங்கள் படத்தின் இன்னபிற சிறப்பு அம்சங்கள். அக்மார்க் ரஜினி படம் பார்க்கின்ற எபஃக்ட்டினை வசனங்கள் அளித்துள்ளது.
ஹாலிவுட் ஆனிமேஷன் படங்கங்களில் எல்லாம் கதாப்பாத்திரத்தின் விழிகளை எல்லாம் எப்படி தத்ரூபகமாக சித்தரித்து இருப்பார்கள் இங்கே எல்லாரின் விழிகளும் ஒரே போலத் தானே இருக்கிறது, படம் சில இடங்களில் இருளோ எனத் தோன்றியது, கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் இப்படி எத்தனையோ கேள்விகள் தொடுத்து ஏளனம் செய்யலாம். ஆனால் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.டி.ராஜசேகர், ரசூல் பூக்குட்டி, சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராஃப் இவர்களை வைத்துக் கொண்டு இதே கதையுடன் ஒரு கமர்சியல் படம் இயக்கி இருந்தால் பாலிவுட் ஓவர்சீஸ் வரை விற்று ஏகத்துக்கு லாபம் பார்த்திருக்கலாம். இதற்கு மாறாக முதற் படத்திலேயே பல ஜாம்பவான்களை வைத்து இந்தியன் சினிமாவில் புதுமையாக ஒரு பிரம்மாண்ட மோஷன் பிக்சர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தைரியம் நம்முள் எத்தனை பேருக்கு வரும்.
இன்று திருவிளையாடல் தருமியை போன்ற ஒப்பனையுடன் நாகேஷை மீட்டுக் கொணர்ந்ததை பார்க்கும் போது அப்படியே நெகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. இனி பிராட்பிட்டினை ஹாலிவுட்டிலிருந்து இறக்கி ஆல்தோட்ட பூபதி பாட்டிற்கு குத்தாட்டம் போட வைக்கலாம், துப்பாக்கி பார்ட்-2விற்கு லியோநார்டோ டிகாப்ரியோவை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ன கெட்டு விடப் போகிறது யார் கேட்கப் போகிறார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையும் இணைத்து தளபதி போன்ற ஒரு கதையை அமைத்து நடிக்கச் செய்யலாம். இனி காலத்தால் அழியாத கலைஞர்களை நமது சந்ததியினரையும் அறிய வைக்கலாம். இந்த எண்ணங்கள் இந்தியக் கலைஞர் பலருள் தோன்றிட கோச்சடையான் வித்திட்டுள்ளது.
நம் ஊரில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனிமேஷன் படம் என்ற பிம்பத்தையும் கோச்சடையான் சிதைத்துள்ளது. ரஜினி தனது ஸ்டைலுடன் முறையாக பரதம் பயின்று ஆடினால் இத்தனை நன்றாக இருக்குமா என்ற யோசனையும் கடந்து அற்புதமாக அமைந்துள்ளது கோச்சடையான் ஆடும் சிவதாண்டவம்.
சௌந்தர்யா தனது தந்தையை எப்படிப்பட்ட சிம்ம சொப்பனமாக கண்டுள்ளார் எப்படி எல்லாம் பார்க்க நினைக்கிறார் என்பதை ரஜினி, ஷோபனா இணையும் ஆடல் காட்சி பிரதிபலித்தது. இயக்குனரை கடந்து ஒரு மகளால்தான் தான் விரும்பும் அப்பாவை இப்படி பிரதிபலிக்க முடியும்.
'வாழ்வை வென்றாய் வையம் சென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா' என்ற வைரனின் வரிகளுக்கு ஏற்ப என்றும் அழியாத சொப்பனமாய் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் அவதரித்துள்ளார்.
ஏளனப் பார்வையுடன்தான் திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் ஏளனப்பட்டதென்னவோ என் பார்வைதான். கோச்சடையான்... ஆனிமேஷனில் வரலாறு கலந்த மசாலா ஷம்போ மஹாதேவ்!
- Thanks and Regards

கஷ்டமான கேள்விகளுக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா பதில்கள்


(படம்: ஆர். ஜெய்குமார்)
(படம்: ஆர். ஜெய்குமார்)
உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?
பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ சாத். ஒரு பிரபுவாக சுகபோகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர் தன்னையும், தன் வாழ்க்கையையும் பரிசோதனைக் களமாக்கி ஏராளமான பக்கங்களை எழுதினார்.
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
தற்பெருமை அடித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதை மிகவும் விரும்பி ஆர்ப்பாட்டமாகவும் ஆரவாரமாகவும் செய்வது என்னிடம் பிடிக்காத குணம்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
தற்போதைக்கு அராத்து.
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
கால எந்திரத்தில் பயணித்து என் கடந்த பிறவியின் வாழ்க்கையைப் பார்ப்பது. அது சாத்தியம்தான் என்கிறார்கள். கையில் ஒரு பைசா இல்லாமல் ஃபிரான்ஸில் நண்பர்களின் உதவியிலேயே சில மாதங்கள் பயணம் செய்தது. பெரூவைச் சேர்ந்த எழுத்தாளர் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) நாவல்களில் வரும் அத்தனை தென்னமெரிக்க ஊர்களையும் பார்க்க விரும்பும் திட்டம் இருக்கிறது.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
அரசாங்க இலாகாக்களில் 20 ஆண்டுகள் வேலை செய்தது. இன்னமும் அந்த மோசமான அனுபவங்கள் என் கனவுகளிலும் துரத்திக் கொண்டிருக்கின்றன.
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
என் இனிய நண்பன் தருண் தேஜ்பால்.
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
சமீபத்தில் ஒரு நாள் என் செல்ல நாய்க்குட்டி பப்புவோடு வாக்கிங் போனேன். நடு ரோட்டில் அது மலம் போய்விட்டது. அந்த வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர் என்னைப் பார்த்து "வயசாயிடுச்சே, மூளை இருக்கா?" என்று கேட்டார். நான் பதில் ஏதும் சொல்லாமல் கையோடு எடுத்துச் சென்றிருந்த காகிதத்தில் அந்த மலத்தை எடுத்து கவரில் போட்டு அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த இளைஞரிடம் சென்று, "எனக்கு மனிதர்கள் தெய்வத்தைப் போல. அதேபோல் நீங்களும் என் தெய்வம். இந்தக் காலை நேரத்தில் உங்களைக் கோபப்படுத்தியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதுதான் இப்போதைய என் மனநிலை.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஸ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.
ஒரு வெள்ளரி பழுத்த பிறகு தானாகவே அதன் கொடியிலிருந்து இற்று விழுவதுபோல் என் மரணம் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். சமீபத்திய உதாரணம், குஷ்வந்த் சிங்.
தொகுப்பு: ஷங்கர்

-- 
Thanks And Regards

Saturday 3 May 2014

தேசிய விருது வென்ற அர்த்தமுள்ள சினிமா

ஷிப் ஆஃப் தீசஸ்

ஷிப் ஆஃப் தீசஸ்

61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ள 'ஷிப் ஆஃப் தீசஸ்' படம் குறித்த பார்வை...
யாரோ ஒருவர் திரையில் ஆடுகிறார், காதல் செய்கிறார், சண்டை போடுகிறார், பன்ச் வசனம் பேசுகிறார், நாயகியை மணம் முடிக்கிறார். இதைப் பார்த்து நான் அடைந்த பலன் என்ன? எதற்காக என் நேரத்தை, பணத்தை விரயம் செய்கிறேன்? இந்த படம் பார்த்து நான் கொண்டு செல்லப் போவது என்ன?
இந்தக் கேள்விகள் உங்களுள்ளே எப்போதாவது எழுவதுண்டா?
பொருளற்ற மசாலாக்கள் போர் அடித்துவிட்டதா? அர்த்தமுள்ள சினிமாவினை தேடி வருகிறீர்களா? கருத்திற்கு விதை போடும் ஒரு சினிமா - நல்ல சினிமா. அதுவே உன்னத சினிமா. இந்திய சினிமாவில் வர்த்தகத்திற்கு வளைந்து கொடுக்காத உன்னத சினிமாக்களை தேடி வருகிறீரா? முதலில் கையைக் கொடுங்க பாஸ், உங்களை போன்றோரைத் தான் தேடி வருகிறேன்.
கிரேக்க மன்னன் தீசஸ் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து உருவாகிய ஒரு சிந்தனை தான் "ஷிப் ஆப் தீசஸ்".
ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது. இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த அக்கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது. இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?
இந்த சிந்தனையில் கப்பலிற்கு பதிலாக மனிதனை வைத்து உயிர், வாழ்க்கை, கொள்கை, சமயோஜிதம் இப்படி பல தரப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் 'ஷிப் ஆப் தீசஸ்'.
இக்கதையில் மூன்று நாயகர்கள். மூன்று பேருக்கும் வாழ்க்கை பற்றிய வேறுபட்ட பார்வை, ஒவ்வொருவருக்கும் தனி கொள்கை. நாம் வாழ்க்கையில் கடந்த, கடக்கவிருக்கும் யாராக வேண்டுமானாலும் இம்மூவர் இருக்கலாம்.
ஒருவர் ஓர் இடத்தில் இருக்கும் சப்தத்தை வைத்து அவ்விடத்திலிருக்கும் சூழலை மனதில் பதிவு செய்து அதை காட்சிப்படுத்தும் பார்வையற்ற பெண் போட்டோக்ராஃபர். பார்வையல்லாதவர் தான் இவர் என்றாலும் இவர் பார்க்கின்ற உலகத்தை, இவரது பார்வையை இவர் எடுத்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும். தன் கணவனே பாராட்டினாலும் தான் எண்ணிய வெளியீடு புகைப்படத்தில் கிட்டாத பட்சத்தில் அதை கிழித்தெறியவும் தயங்காத குணம் இவருக்கு. பார்வையற்ற இவருக்கு ஒரு மனிதனின் தானத்தால் பார்வை வருகிறது.
மற்றொருவர் ஒரு பிட்சு. தன்னைப் போன்று பிற உயிர்க்கும் இவ்வுலகில் வாழ அருகதை உண்டு என நினைக்கும் சிந்தனை இவருக்கு. மாத்திரை, மருந்து உருவாக்குவதில் எண்ணற்ற விலங்குகள் இரையாக்கப்படுவதையும், வதைபடுவதையும் எதிர்த்துப் போராடுகிறார் இவர்.
லிவர் சிரோசிஸ் நோயினால் இந்த பிட்சுவின் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப் படுகிறது. மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மருத்துவர் எச்சரித்தும் தன் கொள்கையிளிருந்து வழுவாது நிற்கிறார். வலி உயிரை வாட்டுகிறது. தேகம் கரைகிறது, இருந்தும் எண்ணத்தில் சிதைவில்லை.
தான் கொண்ட கருத்திற்காக உலகத்தை சிதைக்கும் தீவிரவாதிக்கும், தன்னையே சிதைத்துக் கொள்ளும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்கிறார். உயிர் வாழத்தான் கொள்கை உயிரே போகையில் கொள்கை கொண்டும் என்ன பயன்? உன் கொள்கை உலகத்தில் என்ன வித்தியாசம் உருவாக்கும்? என்று அவர் கேள்வி கேட்கிறார். 'எதுவும் இல்லாததற்கு ஏதோ இருக்கிறது என்ற வித்தியாசம் உண்டாக்குமே அது போதும்' என்று பிட்சு பதிலளிக்கிறார். நாட்கள் நகர நகர, உடல் நலம் மோசமடைய கடைசியில் கொள்கையும் சிதைகிறது மருந்து எடுக்க ஒப்புக் கொள்கிறார்.
மூன்றாவது நபர் முதல் இருவரிலிருந்து வேறுபட்டு நிற்பவர். இவருக்கென்று கொள்கையும் கிடையாது வாழ்க்கை பற்றிய பார்வையும் கிடையாது. ஸ்டாக் ப்ரோக்கராக இருக்கும் இவ்விளைஞன் தன் பாட்டியை பார்த்துக் கொள்ள அவளுடன் மருத்துவமனையில் தங்குகிறான். சமூக அக்கறை கொண்ட இவர் பாட்டி, உயிர்கள் பற்றிய பார்வையை, சமுதாயம் மீது செலுத்த வேண்டிய அக்கறையை புகட்டுகிறார்.
நாளிதழில் கிட்னியை அப்பாவிகளிடம் திருடி பிறருக்கு அளித்த மருத்துவர் கைது என்று செய்தி வெளிவருகிறது.
சமீபத்தில் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்ட செய்தி இவருள் கேள்வியை எழுப்புகின்றது. தன் உடம்பில் புகுத்தப்பட்ட கிட்னி வேறொரு அப்பாவியை ஏமாற்றி கிடைத்ததோ? என்ற ஐயம் இவருக்கு பிறக்கிறது. ஒரு தேடல் இவர் மனதினுள் தொடங்குகிறது. தனக்கு தானம் செய்த மனிதர் என நினைத்து ஒருவரை காணச் செல்கிறார்.
'வேண்டாம், அங்க போகாதே ஒரு வேளை அவன் உனக்கு புகுத்தப்பட்ட கிட்னியை திரும்பித்தர கூறினால் என்ன செய்வாய்?' என்று நண்பர் கேட்க 'கொடுத்திடுவேன்' என்று பதிலளிக்கிறார். பிறகு நண்பர்களால் தனக்கு புகுத்தப்பட்டது இறந்த ஒரு மனிதரிடமிருந்து எடுக்கப்பட்டதென்று அறிந்து கொள்கிறார். இருந்தும் அந்த அப்பாவி மனிதனுக்கு உதவி செய்ய முன்வருகிறார்.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அம்மனிதர் மருத்துவரால் ஏமாற்றப்பட்டு இரு சிறுநீரகத்தையும் இழந்து நிற்கிறார். இவருக்காக உதவும் பயணத்தில் அவ்விளைஞன் மனதில் சமூக அக்கறை பிறக்கிறது.
கடைசியில் இம்மூவருக்கும் ஓர் இடத்திற்கு வரக்கூறி அழைப்பிதழ் வருகிறது, செல்லும் இடத்தில் ஒரு காணொளி திரையிடப்படுகிறது. அதில் ஒரு மனிதனின் ஆசைகள், கனவுகள் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கும் கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மால் உணர முடிகிறது. திரையில் தோன்றிய அவ்விளைஞனின் உடல் பாகங்களே இம்மூவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காட்சிக்குப் பிறகு 'ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?' என்ற சிந்தனை வைக்கப்பட்டு படம் முடிகிறது.
அமைதியான சூழலில் பார்த்தால் இப்படத்தில் அமைந்துள்ள அற்புதமான ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உயிரூட்டும் நடிப்பு, சிந்தனை மிக்க வசனங்கள், நுட்பமான ஒலியமைப்பு கண்டிப்பாக உங்களை நிஜ உலகத்திற்கு அழைத்துச் சென்று அதை பார்க்கின்ற ஆரோக்கிய பார்வையினையும் விதைக்கும்.
சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் படங்களுக்கிடையே நல்ல சிந்தனைக்கு அசை போடும் 'ஷிப் ஆஃப் தீசஸ்' ஓர் ஆத்மார்த்த அனுபவம்.

'செல்'லால் கேட்காமல் செயலால் கேளுங்கள்!

கோப்புப் படம்

சமீபத்தில் ஒரு முக்கிய வேலையில் இருந்தேன். செல்பேசியில் ஓர் அழைப்பு, 'எனக்கு வாக்களியுங்கள்' என்று. என் கவனத்தைச் சிதறடித்ததால், வேளைகெட்ட நேரத்தில் இது எல்லாம் தேவையா என்ற தார்மீகக் கோபம் எழுகிறது.
ஒரு வாடிக்கையாளர் எண் நிச்சயம் அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்போவதில்லை. (அவர்களுக்கு மக்கள் யார் என்று எப்போதும் தெரியாது). இதை வாடிக்கையாளர் பயன்படுத்தும் நிறுவனங்கள் கொடுத்திருக்கலாம். வாடிக்கையாளரிடம் அனுமதி பெறாமல், அவருடைய அந்தரங்க எண்ணை, அரசியல் நிறுவனங்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் எப்படி தருகிறது? எந்தத் தார்மீகம் இதில் பின்பற்றப்படுகிறது?
ஒரு வாக்காளருக்கு, இந்த அழைப்பு எப்படியான மனநிலையை உருவாக்கும் என்பதை ஏன் கட்சிகள், தொலைபேசி நிறுவனங்கள் நினைப்பதில்லை? இதை எப்படி தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தப்போகிறது? இந்தத் தார்மீகத்தைத் தொலைபேசி நிறுவனங்கள் எப்படி காப்பாற்றப்போகின்றன?
நாய்கள் சாலையில் குரைப்பதுபோல், அரசியல் கட்சிகள் பொதுச்சாலையில் கத்துவதை எந்தக் குடிமகனும் மறுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடிக்கையாளரை அழைத்து வாக்குக் கேட்பது எவ்வளவு அநாகரிகம். ஒருவரின் அனுமதி இல்லாமல், அவருடைய எண்ணைக் கண்டறிந்து வாக்குக் கேட்பது என்பது, ஒருவரின் வீட்டிற்குள், அனுமதி இல்லாமல் உள்ளே செல்வதற்குச் சமம்.
தொலைபேசியில் வாக்குக் கேட்கும் உத்தி, புதிய தொழில்நுட்ப உத்தி. இந்த உத்தி பாராட்டத்தக்கதுதான் என்றாலும், வாக்காளர் எதிர்க்கட்சி என்றால், உங்களின் அழைப்பால், அவர் உங்களை மனதில் எவ்வளவு திட்டுவார் என்பதை ஊகித்துப்பாருங்கள் தலைவர்களே! தலைவிகளே!
ஒருவேளை எந்தக் கட்சியையும் விரும்பாதவர் எனில், அவர் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள் கட்சிகளே!
வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர் செல்பேசிக்கு அழைப்பு விடுத்து, ஓட்டு கேட்கும் இந்த மகா தந்திர உத்தியைக் கட்சிகள் நிறுத்திக்கொள்ள இயலும் என்றால் நல்லது. தேர்தல் ஆணையம் இந்த உத்தியைத் தயவுசெய்து தடை செய்யவேண்டும். வாடிக்கையாளர் எண்ணைத் தரும் நபர்கள், நிறுவனங்கள்மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது.
மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் செவி சாய்க்காத எந்த ஒரு கட்சிகளுக்கும், வாக்காளரின் செவி எப்போதும் செவிசாய்க்காது என்பதைக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, வாடிக்கையாளரின் வாக்காளரின் மனோநிலையைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தியைக் கட்சிகள் கைவிடுவதுதான் நல்லது. வாடிக்கையாளரின் எண் அந்தரங்கமானது. அது நண்பர்களுக்கானது, உறவினர்களுக்கானது, உடன் பணிபுரிபவர்களுக்கானது. கட்சிகளுக்கானது அல்ல. இதைக் கடந்து சில தார்மீகக் கேள்விகள் எழுகின்றன
1. வாடிக்கையாளரின் எண்ணை, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள எப்படி பயன்படுத்தலாம்?
2. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், எங்கிருந்து கட்சிகள் எண்ணைப் பெற்றன?
3. வாடிக்கையாளர் எண்ணைக் கொடுத்தவர் யார்? அல்லது எந்த நிறுவனம்?
4. வாடிக்கையாளர் எண்ணைத் தொலைபேசி நிறுவனங்கள் கொடுத்திருந்தால், அவை வாடிக்கையாளரிடம் முன் அனுமதி பெற்றனவா?
5. ஒருவரின் முன் அனுமதி இல்லாமல், ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துக் கேட்டும் இந்த உத்தியைத் தேர்தல் ஆணையம் எப்படி தடைசெய்யப்போகிறது?
கட்சிகளே! தயவு செய்து எங்களை அழைத்து வெறுப்பேற்றாதீர்கள். நீங்கள் உத்தமர் என்றால், உங்களுக்கு வாக்கு தானாக விழும்!
நீங்கள் 'செல்'லால் கேட்பதால் மயங்கி வாக்களித்திட மாட்டோம். ஆக்கப்பூர்வ செயலால் கேட்கப் பழகுங்கள்.


நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்

கோப்புப் படம்

ஆயிரம் பேர் சென்டம் - மகிழ்ச்சியில் கல்வித்துறை'
'தமிழ், கணிதம், வேதியியல் பாடத்திலும் மாணவர்கள் அதிக சென்டம் எடுத்திருக்கிறார்கள்.'
சில நாட்களுக்கு முன் இந்த இரண்டு செய்திகளை வாசித்தபின்தான் எனக்கு நமட்டுச் சிரிப்பு வந்தது.
தமிழ் விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை. அதெப்படி? மாணவர்கள் சரியாக எழுதியிருந்ததால்தானே நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் வரலாம். ஆனால் திரும்பவும் சொல்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சரியாக எழுதவில்லை." எப்படி?
அறிவியல் மற்றும் கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுப்பது சாதனை அல்ல. இயல்பான ஒன்று. கணிதத்தைப் பொறுத்தவரை, படிகள் மற்றும் விடை சரியெனில் நூறு கிடைத்துவிடும். அறிவியலில் எழுத்துப்பிழை பார்ப்பதில்லை. ஆக்சிஸன் என்றாலும் அக்சிசன் என்றாலும் ஒன்றே. அதாவது உச்சரிப்பு மட்டுமே தேவைப்படலாம். அறிவியல் என்பது மொழி அல்ல. அது ஒரு சிந்தனைக்குட்பட்ட பாடம் என்பதால், மொழிப் பிரச்னை அதில் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், தமிழ் அப்படியில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே.
தன் பிள்ளை / மாணவர் தமிழில் யாரும் எடுக்க முடியாத நூறு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் / பெற்றோர் சந்தோஷப்படலாம். உண்மையில் இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லை. நாம் வருத்தப்படவேண்டும். ஏன்?
காலங்காலமாக ஏதாவது ஒரு தனியார் குறிப்பேட்டைத்தான் (நோட்ஸ்) தமிழ் பண்டிட்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். (பரிந்துரைக்காத ஐயாக்களுக்கு, அம்மாக்களுக்கு வாழ்த்துகள்) அவர்கள் பரிந்துரைத்த குறிப்பேட்டைப் பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். பெற்றோர் வாங்கித் தந்த குறிப்பேட்டை டப்பா அடித்து, மாணவர்கள் கக்கி, முழு மதிப்பெண் பெற்று எல்லாரிடமும் வாழ்த்து பெறுகிறார்கள். கிளிப்பிள்ளைப் போல் அட்சர அட்சரமாகத் தவறில்லாமல் எழுதிவிடுகிறார்கள் புத்திசாலிகள். இதற்கு நாம் எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்?
இப்போது பத்தாம் வகுப்புத் தமிழ் விடைத்தாள் திருத்திக்கொண்டிருக்கிறேன். சில விடைத்தாள்கள் நூறு அருகில நெருங்கிவிடும்போது, சக ஆசிரியர்கள் பயந்து என்னிடம் பார்வைக்குத் தருவார்கள். மொழி என்னும் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, விடைகளில் உள்ள சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்பிழை தெரிந்துவிடும். சுழித்துவிடுவேன். தேர்வர் நூறிலிருந்து சருக்கி 90 அருகில் வந்திடுவார். பிறகென்ன நூற்றுக்கு நூறு கனவு அம்போதான். எனவே பெரும்பாலான தமிழ் பண்டிட்கள் தவற விடுவது, இந்தப் பிழைகளைக் கண்டுகொள்ளலாமல் விட்டுவிடுகிறார்கள. (நாங்கள் அப்படி இல்லை என்கிற தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்). திருத்தப்பட்ட விடைத்தாள்கள் விடைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே இரண்டு விஷயங்கள் தென்படுகின்றன. ஒன்று, தனியார் குளிப்பேடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை மாணவர்கள எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே தவறு நிகழ்ந்திருக்கிறது. எப்படி?.
தேர்ச்சி இலக்கு 100 சதவீதம் என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. அப்படி எனில் யார்தான் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை, தமிழ் முதல் தாளில் வினா-விடைகள் மட்டுமே உண்டு. அதில் மனப்பாடமும் அமையும். இந்தப் பகுதியில், பத்திப் பத்தியாக மனப்பாடம் செய்து, அப்படியே பிழையில்லாமல் கக்கினால் நூறு என்பது சாத்தியமே. இதில் மாணவனின் மொழித்திறன் அறியப்படுவதில்லை. அவருடைய நினைவுத்திறன் மட்டுமே வியக்கப்டக்கூடியது. இப்படிப்பட்ட மாணவர் ஒரு செல்ல கிளிப்பிள்ளை. அவ்வளவே.
இரண்டாம் தாள், அதிகம் சவாலானது. அதாவது படைப்புத் திறன் மிக்கது. கவிதை எழுதுதல், பொதுக்கட்டுரை, துணைப்பாடக்கட்டுரை, கடிதம் எழுதுதல் போன்றவை இதில் அடக்கம். இப்பகுதியிலும் மாணவர்கள் தனியார், ஆசிரியர் குறிப்பேட்டைப் பயன்படுத்திக் கக்கி விடுகிறார்கள். திருத்தும் ஆசிரியர்களும் சந்தோஷத்தில் தவறு செய்து மதிப்பெண் அள்ளி வீசுகிறார்கள். எனவே விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை என்ற வரி உண்மையாகிவிடுகிறது.
எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கவிதை எழுதுவது, பொதுக்கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என்பது ஈ அடிச்சான் காப்பிதானே. இதற்கு ஏன் ஆசிரியர்கள் முழு மதிப்பெண் தருகிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் எழுதிய விடைகளில் உள்ள எல்லாப் பிழைகளையும் தமிழ் இலக்கணம் நன்கு தெரிந்த (பல தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது) ஆசிரியர்கள் மிகச் சரியாகத் திருத்திவிடுவாரக்ள். அவர்களிடம் நூற்றுக்கு நூறு ஜம்பம் பலிக்காது.
தமிழ் வினாத்தாளில் முதலிலேயே ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது. "விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல்வேண்டும்" என்று. உண்மையில் உங்கள் பிள்ளை / மாணவர் சொந்த நடையில்தான் எழுதுவாரா என்ற கேள்வியைப் பெற்றோரும் ஆசிரியரும் தமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும்.
தனியார் குறிப்பேட்டையோ, ஆசிரியரின் விடையையோ நகல் எடுத்து எழுதுவது தவறான செயல். ஒரு மாணவரின் தனிப்பட்ட மொழி ஆளுமை காணாமல் போகிறது. மொழிச்சிந்தனை ஒன்று அறவே இல்லாமல் போகிறது. நூற்றுக்கு அருகில் வரும் மாணவரை அழைத்து, புத்தகத்தில் இல்லாத ஒரு செய்தியைச் சொந்த நடையில் எழுதச் சொன்னால்போதும், மாணவர் நிலை என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்.
சொந்த நடையில் எழுதப்படாத எந்தவொரு விடைக்கும் நாம் முழுமதிப்பெண் அளிப்பது தவறான செயல். மொழியின் ஆளுமை என்பது சிந்தனைவயப்பட்டது. அவனுடைய மொழி ஆளுமையை அறிந்து கொள்ளவே கவிதையும் கட்டுரைகளும் கடிதமும். இதில் சொந்தநடை இல்லாதபோது, எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் தமிழ்ப் பண்டிட்கள் எப்படி நூறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே, விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றுதானே அர்த்தம். இந்த தவறைத் திரும்ப திரும்ப தமிழ்க்கூறும் நல்லுலக ஆசிரியர்கள் ஏன் செய்கிறார்கள்? என்றுதான் தெரியவில்லை.
அப்படியெனில் ஒரு மாணவர் சொந்தநடையில் விடைகளை, இலக்கணப் பிழையில்லாமல் எழுதும்போது, முழுமதிப்பெண் வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம். அதுவும சாத்தியமில்லை. ஒரு மாணவனின் கட்டுரை, கவிதை மீதான மதிப்பீட்டுப் பார்வை ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெவ்வேறாக அமையும்போது, நூற்றுக்கு நூறு சாத்தியமில்லை. பொதுக்கட்டுரையும் சரி, கவிதையும் சரி விரிவானவை, திறந்தவெளிக்கானவை. அங்கே முழுமையான விடை என்பது சாத்தியமில்லை. அது கணிதம் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே நூற்றுக்கு நூறு எப்போதும் சாத்தியமில்லை.
இதையெல்லாம் மீறி, வெறும் டப்பா விடைகளுக்கு நூற்றுக்கு நூறு என்று கல்வித்துறையும் பெற்றோரும் மார்தட்டிக்கொள்வது வேதனைக்குரியது, சிரிப்புக்குரியது, அவமானத்துக்குரியது.
உங்கள் பிள்ளையால் சொந்தநடையில் தமிழை எழுத முடியாதபோது, நீங்கள் தயவு செய்து சந்தோஷப்பட வேண்டாம். 100-ல் இருக்கும் பூஜ்யம், உங்கள் பிள்ளையின் மொழித்திறனாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன் - "விடைத்தாள் சரியாகத் திருத்தப்படவில்லை அல்லது மாணவர்கள் சொந்தமாக எழுதவில்லை."